சினிமா செய்திகள்
ஷங்கர்-சுபாஷ்கரன் மனைவிகள் சந்திப்பு? ஒரு மணி நேரத்தில் முடிந்த ‘இந்தியன் 2’ பிரச்சனை!
லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ பிரச்சனை பல மாதங்களாக இழுத்துக் கொண்டே வரும் நிலையில் ஷங்கர் மற்றும் சுபாஷ்கரன் மனைவிகள் நேரில் சந்தித்து பேசியதை அடுத்து ஒரு மணி நேரத்தில் இந்த பிரச்சனை தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்னை வந்து உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. அவர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் உள்பட சில முக்கிய பிரபலங்களை சந்தித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சுபாஷ்கரன் ஷங்கரை அவரது குடும்பத்தினருடன் சந்திக்க விரும்புவதாக தகவல் அனுப்பப்பட்டது. ஷங்கரும் அதற்கு ஒப்புக் கொண்டு தனது மனைவியை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுபாஷ்கரன் மற்றும் அவரது மனைவியை சந்தித்தார்.
ஷங்கர் மற்றும் சுபாஷ்கரன் பொதுவான பிரச்சனைகள் பற்றி பேசிக் கொண்டிருந்த நிலையில் ஷங்கரின் மனைவியும் சுபாஷ்கரன் மனைவியும் ‘இந்தியன் 2’ பட பிரச்சனை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்து விட்டதாகவும் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘இந்தியன் 2’ படத்தை தொடங்க இருதரப்பினரும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பல மாதங்களாக நீதிமன்றம் மூலம் இழுத்தடிக்கப்பட்ட இந்த பிரச்சனை இந்த சந்திப்பின் மூலம் ஒரு மணி நேரத்தில் முடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்திற்கு திரும்புவதற்கும் விக்ரம் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்திற்கு திரும்புவதற்கும் சரியாக இருக்கும் என்பதால் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் ‘இந்தியன் 2’ படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.