இந்தியா
ஷாருக்கான் மகனிடம் பணமே இல்லை: ஜாமின் மனுவின்போது வழக்கறிஞர் வாதம்!
போதைப்பொருள் வாங்குவதற்கு ஷாருக்கான் மகன் ஆர்யன்கானிடம் பணமில்லை என அவரது வழக்கறிஞர் ஜாமின் மனு விசாரணையின்போது தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உல்லாசக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போது அதிகாரிகள் தன்னை வேண்டுமென்றே இந்த வழக்கில் தொடர்புபடுத்தி இருப்பதாகவும் தனது ஜாமின் மனுவை உடனடியாக விசாரித்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஆரியன்கான் தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும் உல்லாசக் கப்பலில் ஆரியன்கானிடம் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் போதைப் பொருள் வாங்கும் அளவிற்கு அவர் கையில் பணம் எதுவும் வைத்திருக்கவில்லை என்றும் உல்லாச கப்பலில் கைப்பற்றப்பட்ட கோகைன் மற்றும் போதை மாத்திரைகளை அவர் உட்கொள்ளவோ அல்லது விற்பனை செய்யவோ இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் போதைபொருள் தடுப்பு அதிகாரிகள் தரப்பில் வாதிட்ட போது தற்போது வழக்கு சரியான திசையில் சென்று கொண்டிருப்பதால் கூடுதல் ஆவணங்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்படாத இருப்பதால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆரியன்கான் உள்பட 8 பேரின் ஜாமீன் மனு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உல்லாச கப்பலில் சென்ற ஆர்யன்கானிடம் பணம் இல்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.