தமிழ்நாடு

செப்டம்பர் 5: ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

Published

on

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், மாதா பிதா குரு தெய்வம் என ஆசிரியர்களுக்கு நமது முன்னோர்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர் என்பது தெரிந்ததே. ஆசிரியர்கள் என்பது மாணவர்களுக்கு கல்வி போதிப்பது மட்டுமின்றி, ஒழுக்கம், பண்பு, பொதுஅறிவு, ஆன்மிகம் போன்ற அனைத்தையும் கற்று கொடுத்து, மாணவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியை செய்து வருகிறார் என்பதால் ஒவ்வொரு ஆசிரியரும் மதிப்புக்குரியவர் ஆவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு மிகச் சிறந்த கல்வியாளர் மற்றும் நல்ல குணங்களை கொண்ட மனிதர் என்பதும் மாணவர்களிடையே பிடித்த ஒரு சிறந்த ஆசிரியராக இருந்துள்ளார் என்பதால் அவருடைய பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் என்பது ஒரு தொழில் அல்ல என்றும் அது ஒரு ஜீவதர்மம் என்றும் உலகெங்கிலும் நிகழும் மாற்றங்களை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு அதனை இளைதலைமுறையினர்களுக்கு கற்று கொடுத்து அவர்களை அடுத்த தலைமுறைக்கு தயார் செய்பவர்கள் ஆசிரியர்கள்.

ஒரு குழந்தையை பெற்றுக் கொடுப்பவள் தாய், அந்தக் குழந்தையை சான்றோன் ஆக்குவது தந்தை. ஆனால் அந்த குழந்தையை தன் சொல்லாலும் எழுத்தாலும் ஒரு முழு மனிதனாக ஆக்குவது ஆசிரியர்தான். எனவேதான் ஆசிரியருக்கு தாய் தந்தைக்கு அடுத்த மூன்றாவது இடத்தை நம் மூதாதையர் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறி, அவர்களது வாழ்க்கையையும் வடிவமைக்கின்றனர். அறியாமை என்ற இருளை நீக்கி ஒளி கொடுப்பது ஆசிரியர்கள் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாணவரின் வெற்றிக்கு துணையாக இருப்பது ஆசிரியர்கள்தான். மற்ற பணிகளைப் போல ஆசிரியர் பணி என்பது ஒரு வாழ்வாதாரத்திற்கான பணி கிடையாது. ஒருவருடைய வாழ்வாதாரத்தை உருவாக்கும் பணி. ஆசிரியர்களின் பணிக்கு ஊதியம் கொடுத்தாலும் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதும் ஆசிரியரின் பணிக்கு எத்தனை கோடி ஊதியம் கொடுத்தாலும் அது நிகராகா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களின் தினத்தை இன்று அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் நாமும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Trending

Exit mobile version