தமிழ்நாடு
வரலாற்றில் இடம்பிடிக்க தீபா, தீபக் இதை செய்ய வேண்டும்: செல்லூர் ராஜூ யோசனை!
வரலாற்றில் இடம்பிடிக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனான தீபா மற்றும் தீபக் இதைச் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆலோசனை கூறியுள்ளார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் குறித்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது என்பதும் இந்த தீர்ப்பில் வேதா இல்லத்தை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீபத்தில் வேதா இல்லத்தின் சாவியை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரிடமும் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற அதிமுகவின் கனவு தகர்க்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கூறியபோது தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்றால் தாமாகவே முன்வந்து வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்ற ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக வேதா இல்லம் மாறினால் தமிழகம் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி உலக அளவிலும் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த ஆலோசனையை தீபா மற்றும் தீபக் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.