சினிமா
இது நடிகர் சங்க தேர்தல் தானே.. நாடாளுமன்ற தேர்தல் இல்லையே.. ஏன் இந்த அலப்பறை!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
இந்த தேர்தல் ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சில ஆயிரம் வாக்குகளை கொண்ட இந்த தேர்தல் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை போல அதிக பரபரப்புடன் நகர்கிறது. ஒவ்வொரு அணியும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கிறது. ஆதரவு கோருவதும், அறிக்கை வெளியிடுவதும், செய்தியாளர்களை சந்திப்பதும் என நடிகர் சங்க தேர்தல் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.
இந்நிலையில் இந்த தேர்தலில் தனது ஆதரவு கே.பாக்யராஜ் அணிக்கு தான் என கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான். செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சங்க தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், இது நடிகர் சங்க தேர்தல் தானே… நாடாளுமன்ற தேர்தல் இல்லையே… இவ்வளவு பரபரப்பாக்க வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த காலங்களில் விஷால் அணிக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அவர்கள், முறையாக இயங்கவில்லை என்பதால்தான் இவ்வளவு எதிர்ப்புகள் வருகிறது. என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில் ஐயா பாக்யராஜை நான் அறிவேன். அவர் எந்த வேலையைச்செய்தாலும் அதில் நேர்மையாக இருப்பார்.
எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக இருக்கும்போது சர்க்கார் பிரச்சனையில் அவருக்கு எவ்வளவோ நெருக்கடிகளை கொடுத்தபோதும் நேர்மையின் பக்கம் நின்றார். அதனால் அவர் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன். அவர் வெல்லுவதற்கு நான் வாழ்த்துகிறேன் என்றார்.