தமிழ்நாடு
சாவி தொலைந்துவிட்டதா? பெட்டியே தொலைந்துவிட்டதா?- திமுக ஆட்சி மீது சீமான் விமர்சனம்
![Seeman - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Seeman-1.jpg)
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து 50 நாட்கள் முடிந்து விட்டன. இதையொட்டி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஸ்டாலின் அரசைப் பாராட்டி வருகின்றன. அதே நேரத்தில் எதிர்கட்சிகள், திமுக அரசை விமர்சித்து கருத்து கூறி வருகின்றன.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சித்து கருத்திட்டு உள்ளார். அவர், ‘திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.
என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!
மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சீமான், அரசின் கொரோனா கால நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது.