தமிழ்நாடு
‘இது நடந்துச்சுனா நான் ஆட்சியில இருந்து அடுத்த நாள் பதவி விலகுவேன்…’- சீமான் கொடுத்த வாக்குறுதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் நேற்று இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல வாக்குறுதிகளைக் கொடுத்தார்.
அவர் பேசும்போது, ‘நான் ஆட்சி அரியணையில் அமர்ந்த பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மீனவன் மீது கூட இலங்கை கையை வைக்க அஞ்சும். அதையும் மீறி எதாவது ஒரு தமிழக மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டால் நான் அடுத்த நாளே பதவி விலகுவேன்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் 07-03-2021 அன்று சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பேரெழுச்சியாக நடைபெற்றது.#வெல்லப்போறான்விவசாயி pic.twitter.com/qHxlSShHGG
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) March 7, 2021
நான் நெய்தல் படை அமைத்து கடல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று சொன்னபோது சிரித்தார்கள். இன்று அதையே தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்துள்ளார். அதை மட்டும் வரவேற்கிறார்கள்.
நாம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுற்றுச்சூழல் பாசறை என்னும் கட்சியின் தனிக் கிளையை ஆரம்பித்தோம். ஆனால், இப்போதுதான் திமுக அதைச் செய்கிறது. நமக்குப் பின்னால் 10 ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறார்கள் இவர்கள். அப்படிப்பட்டவர்களால் எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும். இவர்களிடம் இருந்து தான் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும். இவர்கள் சுற்றுச்சூழலைக் காக்கத் தனி அமைப்பை உருவாக்குகிறார்கள்.
பெண்ணியம் பேசும் இவர்கள், சம உரிமை பேசும் இவர்கள், எங்களைப் போல தேர்தலில் பெண்களுக்கு சம வாய்ப்பை அளிக்க முன்வருவார்களா. நாங்கள் தான் போட்டியிடும் தொகுதிகளில் சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கி களமிறங்குகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.