தமிழ்நாடு

“அப்டியே சிரிச்சுட்டு போயிட்டே இருக்கணும்…”- ஸ்டாலின் அறிவித்த திட்டத்தை கலாய்த்து தள்ளிய சீமான்

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சில நாட்களுக்கு முன்னர் சென்னை, கோபாலபுரத்தில் செய்தியாளர்களை திடீரென சந்தித்தார். அப்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமல் செய்யப் போகும் ஒரு புது வித திட்டம் குறித்து அறிவித்தார். அதாவது, தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களின் பிரச்சனைகளும் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். அதற்காக, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற சுற்றுப் பயணத்தையும் நாளை முதல் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்தார். இதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடுமையாக சாடி கேலி செய்துள்ளார்.

திட்டத்தின்படி, திமுக ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் பொது மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

மேலும், http://stalinani.com என்ற இணையதளம் அல்லது 91710 91710 என்ற எண்ணில் தொடர்புகொண்டு கோரிக்கைகளை பதிவிட்டால், ஆட்சிக்கு வந்தவுடன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார் ஸ்டாலின்.

தொடர்ந்து அவர், ‘இது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி பலருக்கு வரலாம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நான் இன்று உங்களை எல்லாம் சந்திப்பதற்கு தேர்வு செய்திருக்கும் இடம் கோபாலபுரத்தில் இருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் வீடு. இந்த வீட்டில் நான் உங்களை எல்லாம் சந்திப்பதற்கு காரணம் கலைஞர் தான். கலைஞர் அவர்கள், சொன்னதைச் செய்வார். செய்வதைத் தான் சொல்வார். அவர் வழியில் வந்த நானும், சொன்னதைச் செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன்.

உங்கள் குறைகளை என்னிடம் சொல்லுங்கள். அதைத் தீர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு. உங்கள் குறைகளைத் தீர்ப்பதற்கு பொறுப்பு நான் தான். நான் மட்டும் தான் பொறுப்பு. சொன்னதைச் செய்வான் இந்த ஸ்டாலின்’ என்றார் தின்னமாக.

இந்த திட்ட அறிவிப்புக்கு சீமான், ‘திமுக என்னும் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் மக்களுக்குப் பிரச்சனையே. இவர்கள் இதைப் போன்று 100 நாட்களில் பிரச்சனையைத் தீர்க்கிறேன் என்று கிளம்பி வருகிறார்கள் என்றால், மெலிதாக சிரித்துவிட்டுக் கடந்து விட வேண்டும். அதற்கு அதிக கவனம் செலுத்தக் கூடாது.

எம் மக்களுக்குப் பிரச்சனையே இவர்கள் தான். இவர்கள் ஆட்சிக்கு வராமல் இருந்தாலே பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்’ என்று குலுங்கி குலுங்கி சிரித்தபடி பேட்டி கொடுத்துள்ளார் சீமான்.

Trending

Exit mobile version