தமிழ்நாடு
மாரிதாஸ் கருத்துடன் முரண்பாடு, ஆனால் கைதை கண்டிக்கின்றேன்: சீமான்
மாரிதாஸ் கருத்துடன் எனக்கு முரண்பாடு உண்டு என்றாலும் அவரது கைதை நான் கண்டிக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த மாணவர் மணிகண்டன் மற்றும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாரிதாஸ் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மாரிதாஸ் கருத்துக்களின் மீது எனக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அவரது கைதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
ஜனநாயக நாட்டில் எதையுமே பேசக்கூடாது என்று பாஜக சொல்வதற்கும் திமுக எடுக்கும் முடிவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைது செய்தால் நாங்கள் என்னதான் பேசுவது?
அதேபோல தம்பி சாட்டை முருகனையும் வேண்டுமென்றே கைது செய்துள்ளார்கள்/ இந்த அரசு இவ்வளவு வன்மமாக இருக்கிறது என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது/ முதுகுளத்தூர் மணிகண்டன் மாணவர் சந்தேகத்துக்கிடமான உயிரிழந்தது குறித்த மாரிதாஸ் கருத்தை நான் ஆதரிக்கிறேன். தமிழக அரசை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தேன்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கும் தற்போது முதல்வராக மாறிய பின் அவர் பேசிய பேச்சு இருக்கும் நிறைய வேறுபாடுகளை பார்க்கிறேன்.
ஹெலிகாப்டர் விபத்தையும் திமுகவையும் தமிழகத்தையும் இழுப்பது தவறு தான். இங்கே திமுகவா ஹெலிகாப்டரை வாங்குகிறது? மாரிதாஸ் ஆதரவு கட்சி தான் வாங்குகிறது? இந்த ஹெலிகாப்டரை கூட நம்மால் தயாரிக்க முடியாத அளவில் இருக்கிறோம்? வெளிநாட்டிலிருந்து ஏன் வாங்குகிறார்கள்?
மாரிதாஸ் என்னையும் பலமுறை விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால் நான் ஒன்றும் அவர் மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை. அவரை கைது செய்தது தவறு என்று சீமான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.