தமிழ்நாடு
திடீரென உள்வாங்கிய ராமேசுவர கடல்: பக்தர்கள் அச்சம்!
![rameshwaram beach - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/05/rameshwaram-beach.webp)
தமிழகக் கடற்கரைகளில் ஒன்றான திருச்செந்தூரில் அவ்வப்போது திடீரென கடல் உள்வாங்கி வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று திடீரென ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில் திடீரென அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது .
இந்த நிலையில் ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரை, சங்குமால் கடற்கரை, மீன்பிடி துறைமுகம் ஆகிய பகுதிகளில் இன்று திடீரென கடல் உள்வாங்கியது. சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் உள்ள சேறு, சகதி, பவளப்பாறைகள் வெளியே தெரிந்தன .
திடீரென கடல் உள்வாங்கியதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்து கடலை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிமிடங்களில் உள்வாங்கிய கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.