தமிழ்நாடு
ஜூலை 3வது வாரம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா?
ஜூலை மூன்றாவது வாரம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன என்பதும், ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தமிழகத்தில் தொடங்கிய நிலையில் ஆன்லைன் வகுப்புகளும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. நேற்று வெளியான தளர்வுகளின்படி கிட்டத்தட்ட அனைத்துமே திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், பார்கள் தவிர தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்துமே இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஜூலை மூன்றாவது வாரம் பள்ளிகளை திறக்கலாம் என ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் நலனை முன்னிட்டு பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி இளமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஜூலை மாதம் மூன்றாவது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.