தமிழ்நாடு
பள்ளி மாணவிகளை காதலிப்பதாக கூறி லாட்ஜுக்கு அழைத்து சென்று சீரழித்த 19 வயது வாலிபர்கள்!
திருவாரூர் அருகே பள்ளி மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 19 வயது வாலிபர்கள் இரண்டு பேரும் அவர்களுக்கு துணையாக இருந்த 20 வயதான நபர் ஒருவரும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடுவாசல் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவிகள் கடந்த 10-ஆம் தேதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கேயும் கிடைக்காததால் இறுதியில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் பெற்றோர்கள்.
இதனையடுத்து மாணவிகளை கண்டுபிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கியது காவல்துறை. விசாரணையில் குடவாசல் பகுதியை சேர்ந்த 19 வயதான கௌதம் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 19 வயதான சுந்தரமூர்த்தி ஆகியோர் மாணவிகளை காதலிப்பதாக கூறி அழைத்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து நன்னிலம் அருகே உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் இருந்து மாணவிகளை மீட்டனர். மேலும் மாணவிகளுடன் இருந்த வாலிபர்களையும் கைது செய்து விசாரித்ததில், அவர்கள் மாணவிகளை காதலிப்பதாக அழைத்து சென்று வலுக்கட்டாயமாக அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வாலிபர்களையும் அவர்களுக்கு துணையாக இருந்த 20 வயதான மணிகண்டன் என்பவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர். மாணவிகள் அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.