இந்தியா
ராகுல் காந்தியின் பிரட்டன் குடியுரிமை: உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்குலாந்து குடியுரிமை என இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்திலும் குடியுரிமை உள்ளதாக பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2003-ஆம் ஆண்டு பேக்ஆப்ஸ் என்ற பெயரில் இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 51, சவுத்கேட் தெரு, வின்செஸ்டர் என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த நிறுவத்தின் இயக்குனர் மற்றும் செயலாளர்களில் ராகுல் காந்தியும் ஒருவர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து உள்துறை அமைச்சகத்தின் குடியுரிமைப் பிரிவு இயக்குனர் பி.சி.ஜோஷி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சுப்பிரமணியன் சுவாமியின் புகாரையும் குறிப்பிட்டு, பேக்ஆப்ஸ் நிறுவனம் 10.10.2005 மற்றும் 31.10.2006 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்த வருடாந்திர வருமான வரி தாக்கல் விண்ணப்பத்தில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 17.02.2009 அன்று அந்த நிறுவனத்தைக் கலைப்பதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்பத்திலும் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்றே குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளதாக ராகுல் காந்தியே குறிப்பிட்டுள்ளதாகவும் இதனால், ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.