இந்தியா
“ஆபாசப் படமெல்லாம் வருது… OTT தளங்களுக்கு கட்டுப்பாடு போட்டே ஆகணும்!”- உச்ச நீதிமன்றம் கறார்
![ott platform - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/ott-platform.jpg)
நாளுக்கு நாள் இந்தியாவில் பிரபலமடைந்து வரும் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். ‘ஓடிடி தளங்களில் ஆபாசமான காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
‘ஓடிடி தளங்கள் மற்றும் இணையதளம் மூலம் திரைப்படங்கள் பார்ப்பது என்பது சாதாரணமான விஷயமாக ஆகிவிட்டது. எனவே அதில் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஓடிடி தளங்களில் ஒரு வித சமநிலைத் தன்மை நிலவுவதை உறுதி செய்ய வேண்டும். ஏன் என்றால் சிலவற்றில் ஆபாச காட்சிகள் கூட காண்பிக்கப்படுகின்றன’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் கூறியுள்ளார்.
அமேசான் ஓடிடி தளத்தில் சில வாரங்களுக்கு முன்னர் ‘தாண்டவ்’ என்கிற இந்தி வெப் சீரிஸ் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த தொடருக்கு எதிராக தற்போது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அமேசான் தளம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இருந்தது. அதில் தான் நீதிமன்றம் இவ்வாறான கருத்தைத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஓடிடி தளங்களில் எப்படியான தணிக்கைக்கு உட்படுத்தப்படும் என்பது குறித்து ஓர் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இன்னும் அந்த தணிக்கை முறை சரி வர அமலுக்கு வரவில்லை. இந்நிலையில் அந்த தணிக்கை முறை எப்படி இருக்கும் என்பது குறித்தான விவரத்தை தனக்குச் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி பூஷன்.