இந்தியா

வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ விதிகளை மீறி வசூல் செய்த ரூ.300 கோடி: அதிர்ச்சி தகவல்

Published

on

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை கட்டணமாக வசூலித்து உள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

மாதம் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம், பண பரிவர்த்தனை கட்டணம், ரயில் டிக்கெட் புக்கிங், மொபைல் போன் ரீசார்ஜ் போன்றவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் குறித்து நீண்ட நாட்களாகவே புகார்கள் பெறப்பட்டு வருகின்றன

மேலும் சேவை கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகைகள் குறித்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பெரும்பாலும் தெரியாமலேயே போய் வீணாக பண இழப்பும் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது வங்கிகள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப அபராதத் தொகையை வசூலிக்கின்றன

இந்த நிலையில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பணியாளர்களால் வங்கிகள் குறிப்பிடும் அளவுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்துக் கொள்ள முடியாத நிலை இருப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. இதை கருத்தில் கொண்டு வங்கி கணக்கு இல்லாத ஏழை எளிய மக்கள் வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஆக மாறினார்கள்

ஆனால் இந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை கட்டணம் என்ற பெயரில் ஏதாவது தொகையை வங்கிகள் வசூலித்துக் கொண்டு தான் உள்ளன. அந்த வகையில் நாடு முழுவதும் 45 கோடிக்கு மேலான வாடிக்கையாளர்களைக் கொண்ட பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்-இல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்பிஐ 17 ரூபாய் 70 காசுகள் கட்டணம் வசூலித்து உள்ளது. இவ்வாறு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து தேவையில்லாமல் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 12 கோடி கணக்குகளில் இருந்து 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோன்று இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல கோடி ரூபாயை வசூலித்து விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐஐடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version