தமிழ்நாடு
இனி சனிக்கிழமை வகுப்புகள் கட்டாயம்.. கல்லூரி மாணவர்கள் ஷாக்!
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குச் சனிக்கிழமை வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
2022-2023 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது.
எனவே நடப்பு கல்வி ஆண்டில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கற்றல் இழப்பு ஏற்பட்ட நிலையில் நேரடியாக உயர் கல்விக்கான வகுப்புகளைத் தொடங்காமல் முதல் ஒரு வாரத்திற்கு அடிப்படை வகுப்புகள் மட்டுமே எடுக்கப்பட்டன.
இதனால் வழக்கமான வகுப்புகள் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. எனவே மே 1-ம் தேதிக்குள் இந்த ஆண்டுக்கான பாடத்திட்டங்களை உரிய நேரத்தில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குச் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த மாநில கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.