உலகம்

சேட்டிலைட் புகைப்படத்தால் சிக்கிய சீனா… வியட்நாம் எல்லையில் ஏவுகணை தளம் அமைப்பது அம்பலம்

Published

on

பீஜிங்: வியட்நாம் எல்லைக்கு அருகே சீனா புதிய ஏவுகணை தளத்தை அமைகிறது என வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்சீன கடல் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உரசல் இருந்து வரும் நிலையில் இப்போது இந்த நடவடிக்கை மேலும் பதற்றத்தை ஏற்படுத்த கூடியது என்றும் வியட்நாம் கவலை தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடல் செய்தி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், தரையில் இருந்து வான் நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை கொண்ட தளத்தின் செயற்கைக்கோள் படங்களை ட்வீட் செய்த பின்னர் இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லி தி து ஹாங், இந்த விவகாரம் குறித்து முறையாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

வியட்நாம் எல்லையிலிருந்து 20 கி.மீ தூரத்தில் ஏவுகணைத் தளம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளன. இது சீனாவின் குவாங்சி மாகாணத்தின் நிங்மிங் கவுண்டியில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு ஹெலிகாப்டர் தளமும் அதற்கு சற்று உள்ளே அமைக்கப்படுவதாகவும் அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. மற்றும் அங்கிருக்கும் இராணுவ ஓடுபாதையில் ரேடார்கள் மற்றும் குறைந்தது ஆறு ஏவுகணைகள் இருப்பதையும் சேட்டிலைட் படங்கள் காட்டியுள்ளன

தென்சீன கடலில் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் படையினர் மீது தன்னுடைய விமானப்படையை சேர்ந்த குண்டுவீச்சு விமானங்கள் எச்சரிக்கை தாக்குதல் மேற்கொண்டதாக சீனா அறிவித்த ஒரு வாரத்திற்கு பிறகு இந்த செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீனா புதிய கடலோர பாதுகாப்பு சட்டத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம் தென்சீன கடலில் மற்ற நாடுகளை விட குறிப்பிட தகுந்த ஆதிக்கத்தை சீனா பெறுகிறது. இந்த புதிய சட்டம் சீன கடலோர காவல்படையினருக்கு அவர்கள் எல்லைக்குள் நுழைந்ததாக கருதினாலே வெளிநாட்டுக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதிக்கிறது. இது உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய கடல்பகுதியான தென்சீன கடல் பகுதியில் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

ஏனெனில் கிட்டத்தட்ட 90 சதவிகித தென்சீன கடல் பகுதி தனக்கு சொந்தம் என சீனா ஏற்கனவே உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக ஜப்பான், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளுடனும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த பிராந்தியங்களில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்காவின் போர்கப்பல்களை மற்ற நாடுகளுக்கு ஆதரவாக அந்த பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் இப்போது பொறுப்பேற்று இருக்கும் பைடன் அரசாங்கம் அதுமாதிரியான ஒரு நடவடிக்கையை எதுக்குமா என்பதில் சந்தேகமே..!

Trending

Exit mobile version