தமிழ்நாடு
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா முடக்கம்!
சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்றை வருமானவரித்துறை திடீரென முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று சசிகலா உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சிறை தண்டனை அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
4 வருட சிறை தண்டனைக்குப் பிறகு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை அடைந்தனர். இந்த நிலையில் விடுதலை ஆன பின்னரும் தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா சொத்தை முடக்கி வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஜெயலலிதா மற்றும் சசிகலா சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் பினாமி சொத்து சட்டத்தின்கீழ் சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சசிகலா சிறையில் இருந்தபோது சிறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து முறைகேடாக சில வசதிகளைப் பெற்று வந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.