தமிழ்நாடு
ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா: அரசிடம் அனுமதி கேட்டு மனு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் செல்ல முடிவு செய்துள்ள சசிகலா அதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலா கைவசம் அதிமுக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதை அடுத்து ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகியோரிடம் கட்சி கைக்குள் வந்தது என்பதும் ஆட்சி இபிஎஸ் அவர்களின் கீழ் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
4 வருட சிறை தண்டனையை முடித்து விட்டு வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரசியலில் ஈடுபடாமல் அமைதியாக அரசியலை அவர் ஆழ்ந்து கவனித்து வந்தார் என்பதும் ஒரு சிலர் தொண்டர்களிடம் அவர் பேசிய ஆடியோ இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்ததும் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று அவர் வழி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை அவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் அக்டோபர் 16-ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஜெயலலிதா நினைவிடம் செல்ல சசிகலா திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக பாதுகாப்பு கேட்டு அவர் காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
ஜெயலலிதா நினைவிடத்தை அடுத்து எம்ஜிஆர் மற்றும் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலாவுக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும் என தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது குறித்த முக்கிய அறிவிப்பை சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.