தமிழ்நாடு
‘எம்.ஜி.ஆரே என்னிடம் கருத்து கேட்பார்’- புதிய ஆடியோவில் சசிகலா பேச்சு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த ஆடியோவில் தான் எப்படி எம்.ஜி.ஆரோடு செயல்பட்டார் என்பது குறித்து ஆதரவாளருடன் பேசியுள்ளார்.
புதிய ஆடியோவில் சசிகலா, ‘தலைவரோடையும் நான் சேர்ந்து பயணித்திருக்கேன். நிறைய விஷயங்களை அவருடன் நான் பேசியிருக்கிறேன். என்னிடம் கட்சி சார்ந்து நிறைய கருத்துகளைக் கேட்பார். அதற்கு நானும் மிகப் பணிவுடன் தான் கருத்துகளைச் சொல்வேன்.
அதனால் தான் ஜெயலலிதா கோபப்பட்டால் கூட, அவருடன் அமர்ந்து பேசி, பொறுமையாக முடிவெடுக்க வைப்பேன். தொண்டர்களுக்காக நீங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்வேன். அப்படிச் சொல்லி தான் ஜெயலலிதாவை தொடர்ந்து இயங்க வைத்தோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது’ என்று பேசியுள்ளார்.
முன்னதாக சசிகலா குறித்து சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘அந்த அம்மா இப்ப எங்க கட்சியிலேயே இல்லை. அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிற கட்சி. எனவே அந்த அம்மா 10 பேர் கிட்ட இல்ல, ஆயிரம் பேர் கிட்ட பேசினாலும் எங்களுக்குக் கவலை இல்லை’ என்று கூறியுள்ளார்.