தமிழ்நாடு
பொறுத்தது போதும், அதிமுகவுக்கு தலைமை ஏற்று கொள்ளுங்கள்: சசிகலா ஆதரவு போஸ்டரால் பரபரப்பு!
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்றும், அதிமுகவுக்கு தலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் அதிமுக தலைமை அலுவலகம் அருகில் ஒட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் தற்போது பெரும் பிரச்சினை உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் நாளை நடைபெறவிருக்கும் அதிமுக கூட்டத்தில் தான் எதிர்கட்சித் தலைவர் குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அதிமுக கூட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு ஓபிஎஸ் தான் காரணம் என ஈபிஎஸ் தரப்பினரும் ஈபிஎஸ் தான் காரணம் என ஓபிஎஸ் தரப்பினரும் மாறிமாறி குற்றம்சாட்டி வருவது அதிமுகவின் இரட்டை தலைமையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவின் ஒற்றுமை மேலோங்க, கட்சியை காப்பாற்ற, சசிகலாதான் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என்பது குறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தலைமையகம் அருகிலேயே துரோகிகளை துவம்சம் செய்ய அம்மாவின் தூய உள்ளமே வருக என்றும் பொறுமை போதும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் வாசகங்கள் குறிப்பிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.