தமிழ்நாடு
‘சசிகலா கூறுவது தவறு… அதிமுக-வை வீழ்த்த முடியாது’: எடப்பாடி பழனிசாமி காட்டம்!
‘சசிகலா அளிக்கும் தகவல்கள் அனைத்தும் தவறு’ என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சசிகலாவின் நேர்காணல் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வந்தது. இந்த சூழலில் அதுகுறித்துப் பேசியுள்ளார் முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக-வின் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “சசிகலா தொடர்ந்து அளித்து வரும் தகவல்கள் தவறானவை. அதிமுக என்னும் கட்சியை யார் நினைத்தாலும் வீழ்த்தவே முடியாது. அதிமுக தற்போது விரைவில் வரக்கூடிய தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்காக வீரியத்துடன் தயாராகி வருகிறது.
கொரோனா பரவலின் போது அதிமுக அரசு தடுப்பூசிகளை வீணடித்ததாக திமுக-வின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அன்றைய அரசு கொரோனா தடுப்பூசிகளை வீணடிக்கவில்லை. அன்றைய சூழலில் மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்தப் போதிய விழிப்புணர்வு இல்லை” என்றும் விளக்கம் அளித்தார்.