தமிழ்நாடு
வருகிற தேர்தலில் சசிகலா போட்டி: ‘இதுதாங்க திட்டம்..!’- டிடிவி தினகரினின் மாஸ்டர் பிளானிங்
சசிகலா, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டு ஜனவரி மாதம் தான் சசிகலா விடுதலையானார். அவர் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி, ஆதரவாளர்களின் பிரம்மாண்ட வரவேற்பின் மூலம் தமிழகம் திரும்பினார். தற்போது சசிகலா, சென்னை, தியாகராய நகரில் இருக்கும் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் அதிமுகவை மீண்டும் கைப்பற்றும் பணிகளில் சீக்கிரம் இறங்குவார் என்று நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. இப்படி சசிகலாவின் அடுத்த அரசியல் மூவ் என்னவாக இருக்கும் என்பது குறித்து பரபரப்பு நிலவும் நிலையில், அவர் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாம்.
இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தினகரன், ‘சசிகலா, இந்த தேர்தலிலேயே போட்டியிட வைக்க நாங்கள் முயன்று வருகிறோம். சட்ட ரீதியாக அவரைக் களமிறக்க நாங்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, குறிப்பிட்ட ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் நீதிமன்றம் தன் உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளது. அதுவே அவரின் தேர்தல் போட்டிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.