தமிழ்நாடு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்!
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் இன்று ஆங்காங்கே கூடி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர். மேலும் அதிமுக கொடிகளை ஏற்றியும் ஜெயலலிதாவின் பாடல்களை ஒலித்தும் மாநிலம் முழுவதும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுகவின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விக்குறி இருந்த நிலையில் ஜெயலலிதா அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழகத்தையும் மூன்று முறை ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா வெளியிட்ட அறிக்கை ஒன்று நமது எம்ஜிஆர் நாளிதழில் இன்று மீண்டும் வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் ’தீமையை அழித்து நன்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற லட்சியத்தை திரையுலகை தாண்டி பொது வாழ்விலும் அரசியல் களத்திலும் சாதித்து காட்டினார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவருடைய வழியில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நலன் ஒன்றையே எனது நலமாக, அவரின் விருப்பங்களை எனது விருப்பமாக, அவரின் லட்சியங்களுக்கு உடன் நிற்கும் துணையாக இதுவரை என் வாழ்வு அமைந்து விட்டது.
இந்த 33 ஆண்டு பயணத்தின் பொழுதுகளை நினைத்துப் பார்த்துக் கொண்டே எனது எஞ்சிய வாழ்நாளை கழித்து விடலாம் என்றாலும் இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இந்த இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கி விடக்கூடாது என்கிற என் உள்ளார்ந்த அக்கறையாலும், என் அன்பு உடன்பிறப்புகளாகிய உங்களின் அன்பு கட்டளையாலும், இந்த பொது வாழ்வு என்ற வேள்வியில் என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டேன் என்று சசிகலா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு சசிகலா விடுத்த இந்த அறிக்கை இன்று வைரலாகி வருகிறது