தமிழ்நாடு
இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சசிகலா- கடம்பூர் ராஜூ சொல்லும் புது விளக்கம்!
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, இரட்டை இலைக்குத் தன் ஆதரவை மறைமுகமாக தெரிவித்து விட்டார் என்று புது வித விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.
அவர் இந்த முறை கோவில்பட்டித் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிற்கிறார். இருவருக்கும் இடையில் கோவில்பட்டியில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படியான விநோதமான கருத்தை கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
‘மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்று சசிகலா மனசாட்சிப்படி, மரியாதையாக அறிக்கை விட்டுள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சிக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக அவர் கூறியுள்ளார் என்பதுதான் எங்களின் கருத்து. இரட்டை இலை வெற்றி பெற்றால்தான் ஜெயலலிதாவின் ஆட்சி. இதைத்தான் சசிகலா மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரிந்து சென்றபோது தினகரனின் நண்பர்களாக இருந்து நாங்கள், அவருக்கு வேண்டுகோள் வைத்தோம். எங்களுடைய வேண்டுகோளை டிடிவி தினகரன் ஏற்றிருந்தால் அவருடைய நிலைமையே வேறு. இந்த நிலைக்கு தினகரன் தள்ளப்பட வேண்டிய அவசியமில்லை. அன்று எங்களின் வேண்டுகோளை ஏற்காமல், உடன் இருந்தவர்களின் தவறான வேண்டுகோளை ஏற்றதால்தான், தினகரன் இப்படி இருக்கிறார்’ என்று கூறியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.