தமிழ்நாடு
அதிமுகவில் 40 சீட் கேட்டு கெஞ்சுகிறாரா சசிகலா? முன்னணி ஊடகம் செய்தி
அதிமுகவில் 40 சீட்டுகள் கேட்டு சசிகலா பாஜகவிடம் தூது விடுவதாக முன்னணி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் அதிமுகவில் உள்ள பெரும்பாலானோர் அவருடைய ஆதரவாளராக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒருவர் கூட சசிகலா ஆதரவாளர்கள் என்ற நிலையை எடுக்கவில்லை.
இந்த நிலையில் அதிமுகவில் அமமுகவை இணைக்க சம்மதம் என்றும் தனது ஆதரவாளர்கள் 40 பேருக்கு சீட்டுகள் கொடுக்க வேண்டும் என்றும் பாஜக மூலம் சசிகலா தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக-அமமுக இணைப்பு சாத்தியமில்லை என்றும் சசிகலாவிடம் மீண்டும் கட்சியை ஒப்படைத்தால் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்க்கான கட்சியாக அதிமுக மாறிவிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவுடன் இணைப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை. அதிமுக கூட்டணியில் தங்களுக்கு இடம் வேண்டும் என்று சசிகலா இறங்கி வந்ததாகவும் அதற்கும் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டதாகவும், சசிகலா, டிடிவி தினகரன், அதிமுக இணைப்பு என்ற பேச்சே வேண்டாம் என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது தொழிலதிபர்கள் மூலம் அமித்ஷாவிடம் சசிகலா தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் எப்படியாவது அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட வேண்டும் என சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.