தமிழ்நாடு
சசிகலா-சரத்குமார் திடீர் சந்திப்பு: புதிய கூட்டணியா?
சசிகலாவை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சற்றுமுன்னர் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இடம் பெற்று உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரிரு தொகுதிகள் கொடுத்தால் கூட்டணியில் நீடிக்க மாட்டோம் என்றும் நாங்கள் திருப்தி அளிக்கும் வகையில் தொகுதிகள் கிடைத்தால் மட்டுமே கூட்டணியில் நீடிப்போம் என்றும் சமீபத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த சரத்குமார் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதிமுக கூட்டணியில் ஒற்றை இலக்கங்களில் தான் சரத்குமார் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதுவும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் சற்று முன்னர் சசிகலாவை சரத்குமார் சந்தித்து உள்ளதாகவும் அமமுக மற்றும் சரத்குமார் கட்சி இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அமமுக கூட்டணியில் சரத்குமார் கட்சி கூட்டணியில் இணைந்தால் அந்த கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுவதால் அதிமுக தரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்.