தமிழ்நாடு
சரத்குமார் தலைமையில் புதிய கூட்டணியா? அப்ப சசிகலா சந்திப்பு என்ன ஆச்சு?
நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதிமுக கூட்டணியில் தங்களுக்கு கௌரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் நேற்று தேர்தல் தேதி அறிவித்த நிலையில் அவர் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
மேலும் தனது கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே கட்சி வெளியேறி உள்ளதை அடுத்து சரத்குமார் தலைமையிலான கூட்டணியில் அந்த கட்சி இணைந்துள்ளது.
மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கான புதிய கூட்டணி தற்போது உருவாகியுள்ளது என்று சரத்குமார் கூறியுள்ளார். சமீபத்தில் சசிகலாவை நேரில் சந்தித்து பேசிய சரத்குமார் அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தனது தலைமையிலேயே ஒரு புதிய கூட்டணியை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரத்குமார் அமைத்துள்ள இந்த புதிய கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக மற்றும் அதிமுக, திமுக கூட்டணியில் இருந்து அதிருப்தியின் காரணமாக வெளியேறும் கட்சிகளும் இணையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.