சினிமா செய்திகள்

சரித்திரங்கள் மறப்பதற்கு அல்ல: ‘ஜெய்பீம்’ படம் குறித்து சரத்குமார் அறிக்கை!

Published

on

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒரு சிலர் மட்டும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பொதுவாக இந்த படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் ‘ஜெய்பீம்’ படம் குறித்து கூறியிருப்பதாவது:

ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்தேன். நடந்த சம்பவங்களை, சரித்திர நிகழ்வுகளை மறந்த நிலையில், நீதியரசர் சந்துரு அவர்களின் சமூக அக்கறையை உலகம் மறந்துவிடக்கூடாது என்ற சிறந்த நோக்கத்தோடும், சமூக அநீதிகளை பிரபலங்கள் எந்தவொரு தயக்கமில்லாமல் வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற ஜெய்பீம் சூர்யாவின் உன்னத எண்ணத்தை முதலில் பாராட்டுகிறேன்.

சரித்திரங்கள் மறப்பதற்கு அல்ல, அவை கற்றுக்கொடுக்கும் பாடங்களை உலகறியச் செய்ய வேண்டும். அப்போதுதான் நல்ல எண்ணங்கள், நாட்டுப்பற்று, சமூக ஒழுக்கம், சமூக நீதி, சமத்துவம் நிலைநாட்டப்படும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் ராசாக்கண்ணுவின் வழக்கும் அவரது மரணமும்.

நீதியை நிலைநாட்ட போராடிய அவரது மனைவி, நீதி தோற்று விடக் கூடாது என்று போராடிய சந்துருவை போலவும் பெருமாள்சாமியை போலவும் நாட்டில் பலர் தோன்றவேண்டும். நீதி அனைவருக்கும் பொது. இதில் ஏற்றத்தாழ்வு, ஏழை, பணக்காரன், சாதி, மத, மொழி, பேதம் கூடாது என்ற நிலை எப்போது வருகிறதோ அன்று தான் நாடு உண்மையான சுதந்திர நாடு.

சிறந்த படத்தை தந்த சூர்யாவை போற்றுகிறேன். ஞானவேலை வாழ்த்துகிறேன். ராசா கண்ணு, செங்கேணி, தமிழ், சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கும் சக கலைஞர்கள் அனைவரையும் என் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து போற்றுகிறேன்’ என்று சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version