தமிழ்நாடு
பழனிசாமி உள்பட ஒரே தொகுதியில் ஒரே பெயரில் போட்டியிடும் வேட்பாளர்கள்!
முன்னணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதே பெயரில் பல வேட்பாளர்கள் களம் இறங்குவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கு இந்த தேர்தல் விதிவிலக்கல்ல. ஒரே பெயரில் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் மக்கள் குழப்பத்தில் மாற்றி ஓட்டு போட அதிக வாய்ப்பு உள்ளது. ஒரே பெயரில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தற்போது பார்ப்போம்.
ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ் தங்க பாண்டியன் போட்டியிட அதே பெயர் கொண்ட மேலும் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்பிரமணியம் பெயரில் மூன்று வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பாப்பிரெட்டி தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பழனியப்பன் இந்த முறை அமமுக சார்பில் களம் காண்கிறார். அவரது பெயரில் ஒரு சுயேச்சை வேட்பாளர் போட்டியிடுகிறார்.
ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் வீரமணி பெயரிலேயே மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சிங்காநல்லூரில் திமுக வேட்பாளர் கார்த்திக் பெயரில் மட்டுமல்ல அவரது இனிஷியல் உடன் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அரக்கோணம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் கௌதம் பெயரில் இரண்டு சுயேச்சைகள் உள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இண்டிகோ இருதயராஜ் போட்டியிட இருதயராஜ் என்ற பெயரில் ஒருவர் வேட்பாளராக உள்ளார்.
இறுதியாக தமிழக முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் கூட பழனிசாமி என்ற பெயரில் ஒரு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் களத்தில் உள்ளார்.