சினிமா

சென்னையில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா

Published

on

சென்னை: நடிகை சமந்தா சென்னையில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகும் திரையுலகில் சாதிக்க முடியும் என்று நிரூபித்த நடிகைகளில் ஒருவராகியுள்ளார் சமந்தா. நாகச் சைதன்யாவை திருமணம் செய்த பிறகு அவர் மார்க்கெட் பாதிக்கவில்லை.

 

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துவரும் நடிகை சமந்தா, அவ்வப்போது சமூகச் சேவையிலும் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு, ‘பிரத்யூஷா’ என்னும் தொண்டு நிறுவனத்தை நிறுவிய சமந்தா, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தன்னால் முடிந்த மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவருகிறார்.

தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சிலவற்றுடன் ஒன்றிணைந்து இந்தச் சேவையைச் செய்துவருகிறார். சமீபத்தில், பிரத்யூஷா தொண்டு நிறுவனம்மூலம் கேரளா வெள்ளத்துக்கும் நிதி திரட்டிக் கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தா சினிமாவில் சம்பாதித்த பணத்தில் சமூகச் சேவை பணிகள் செய்கிறார். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கு உதவினார். பள்ளிகளிலும் துப்புரவு பணிகள் செய்து மாணவ-மாணவிகளுக்கு உதவிகள் செய்கிறார்.

இப்போது விஷாலுடன் நடித்துள்ள இரும்புத்திரை பட விழாவில் கலந்துகொள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காகக் காய்கறி விற்று நிதி திரட்டினார். மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் உட்கார்ந்து காய்கறிகளை அவர் விற்றார்.

சமந்தா கையால் காய்கறி வாங்க பெரிய கூட்டம் கூடியது. ரசிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டார்கள். அவர்கள் அதிகப் பணம் கொடுத்துச் சமந்தாவிடம் இருந்து போட்டி போட்டுக் காய்கறிகளை வாங்கினார்கள். சிறிது நேரத்திலேயே கடையில் இருந்த அத்தனை காய்கறிகளும் விற்றுத் தீர்ந்தன. இதில் வசூலான தொகை முழுவதையும் நலிந்த மக்களுக்குச் சமந்தா வழங்குகிறார்.

லக்ஷ்மி மஞ்சு நடத்தி வரும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்ய ஒரு நாள் கூலி வேலை பார்த்துச் சம்பாத்தித்துப் பணம் அளிக்கிறார்கள். பாகுபலி படம் புகழ் ராணா கூட மூட்டை தூக்கி பணம் சம்பாதித்துக் கொடுத்தார். இந்நிலையில் சமந்தா காய்கறி விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version