தமிழ்நாடு
பிடிகொடுக்காத கலெக்டர் ரோஹினி: தூக்கியடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹினி தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்த ரோஹினி ஆளும் கட்சிக்கும் முதல்வருக்கும் இணக்கமாகத்தான் பணியாற்றி வந்தார். ஆனால் அவர் திடீரென மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு முன்னர் வரை ரோஹினி முதல்வர் இட்ட பணிகளை செய்யக்கூடியவராகவே இருந்துள்ளார். ஆனால் சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியாக ரோஹினி ஆளுங்கட்சி எதிர்கட்சி என பாரபட்சம் இன்று கடுமையாக நடந்துகொண்டதே இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
குறிப்பாக சேலத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்தபோது கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கோட்டை மைதானத்தில் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. அங்கிருந்து முதல்வரின் வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் வரைக்கும் இரு புறமும் அதிமுக, கூட்டணிக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அது தேர்தல் விதிமுறை என்று சொல்லி அகற்ற கலெக்டர் ரோஹினி உத்தரவிட்டார். இது அப்போதே முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டு எண்ணிக்கையில் பல விசாரணை நடத்தினார் ரோஹினி. இப்படி விதிகளை பாரபட்சமின்றி கடுமையாக அமல்படுத்தினார். தேர்தல் முடிவுக்கு பின்னர் இரண்டடுக்கு பாலம் துவக்க விழாவில் சேலம் திமுக எம்பி பார்த்திபனை முறைப்படி அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் முதல்வர் கலந்துகொண்ட அந்த விழாவில் பல குளறுபடிகள் நடந்தது.
இதனையடுத்து கலெக்டர் ரோஹினியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்பியாக பதவியேற்கறதுக்கு முன்னாடியே நீங்க இப்படி பண்ணலாமா? என தனது ஆதங்கத்தை கேட்டுள்ளார். ஆனால் அடுத்த ஓரிரு நாட்களில் திமுக எம்பி பார்த்திபன் கலெக்டர் அலுவலகம் சென்று பார்த்தார். இவை எல்லாம் சேர்த்து தான் இந்த பணி மாற்றம் வந்திருக்கிறது என்கிறார்கள்.