தமிழ்நாடு

சட்டமன்றத் தேர்தலில் போட்டியா..? அடுத்தகட்ட அரசியல் மூவ் என்ன? – மனம் திறக்கும் சகாயம்

Published

on

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து களமாடி வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தற்போது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில், அரசியல் கட்சி ஆரம்பித்துப் போட்டியிடக் கூடும் என்று சிலர் ஆருடம் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, சகாயம், நாம் தமிழர் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தன் ‘மக்கள் பாதை’ இயக்கத்தில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளார் சகாயம். தொடர்ந்து அவர் மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் உரையாற்றி வருகிறார். சகாயம், சமீபத்தில் தான் பார்த்து வந்த ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்பு ஓய்வு கேட்டிருந்தார். அவருக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் விருப்ப ஓய்வு கொடுத்தது தமிழக அரசு.

இந்நிலையில் தன் அரசியல் வருகை குறித்து சகாயத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த போது, என்னிடம் தொடர்ந்து அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டு வந்தது. நான் அரசு அதிகாரி. என் கடமையைச் செய்ய நான் அரசிடம் இருந்து நான் ஊதியம் பெற்று வந்தேன். இப்படி இருக்கையில் என்னிடம் ஏன் அரசியல் குறித்து கேள்வி கேட்கிறார்கள் என்று கேட்டு வந்தேன். அதையே தான் நான் இப்போதும் கேட்கிறேன். மக்கள் பாதை இயக்கம் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதற்கான பணிகளை மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த சமூக மாற்றமானது விரைவில் நிர்வாக மாற்றத்தையும் கொண்டு வரலாம்’ என்றவர்,

ஊழலுக்கு எதிரான தன் பயணம் குறித்து, ‘நான் அரசு அதிகாரியாக இருந்த போது, தனி ஒரு ஆளாக இருந்து ஊழலை எதிர்த்தேன். அதற்காக பல்வேறு முறை பணி மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டேன். நான் ஊழலை எதிர்ப்பது என்பதை, வெறுமனே லஞ்சம் வாங்காமல் செயல்படுவதாக பார்க்கவில்லை. ஊழல் என்பது தான், நம் நாட்டின் மொத்த வளர்ச்சியையும் தடுக்கின்றது என்று நம்புகிறேன். அதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையும் என்றும் நினைக்கிறேன். அதற்கான சமூக மாற்றப் பணிகளைத்தான் மக்கள் பாதை இயக்கம் மூலம் செய்து வருகின்றேன்’ என்று கூறினார்.

தமிழ்ச் சமூகம் குறித்து சகாயம் பேசுகையில், ‘தமிழ்ச் சமூகத்தில் நேர்மை என்பது குறைந்துள்ளதை நான் காண்கிறேன். ஒரு சமூகமாக நாம் விழித்தெழ வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ்ச் சமூகம் தன் அடிமைத்தனங்களை உடைத்தெறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஊழலை எதிர்த்து, நேர்மையான சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற வேண்டும். அப்படி மாறினால், நேர்மையான தலைவர்களை இந்தச் சமூகம் தானாக தேர்ந்தெடுக்கும். அந்த மாற்றத்துக்காகத் தான் நான் செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்’ என்று முடித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version