தமிழ்நாடு
திமுகவில் மேலும் ஒரு வாரிசு: ராஜ்யசபா எம்பி ஆகிறார் ஸ்டாலின் மருமகன் சபரீசன்?
வரும் ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ராஜ்யசபா எம்பியாக உள்ளதாக ஒரு தகவல் வருகிறது.
திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரும் முக்கியமான பதவிகளிலும், பொறுப்பகளிலும் இருந்து வருவதால் அந்த கட்சியை குடும்ப கட்சி என விமர்சிப்பர். இந்நிலையில் நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ராஜ்யசபா எம்பி ஆக உள்ளார் என அன்பில் மகேஷ் வட்டாரங்களில் இருந்து தகவல் வருகிறது.
திமுகவுக்கு கிடைக்க உள்ள 3 எம்பிக்களில் ஒன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், இன்னொன்று திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சனுக்கும் மீதமுள்ள ஒரு எம்பி பதவியை தனது மருமகன் சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வழங்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இனிமேல் சபரீசன் தான் மு.க.ஸ்டாலினுக்கு எல்லாமுமாக டெல்லியில் இருப்பார் என கூறப்படுகிறது. கலைஞருக்கு முரசொலி மாறன் இருந்தது போல என சிலாகிக்கிறார்கள்.
இந்த தகவலை சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ் தனது ஊடக நண்பர்கள் மற்றும் தனது வட்டாரங்களில் கூறி வருவதாகவும் தகவல் வருகிறது.