தமிழ்நாடு
எனது கணவர் சாட்டை துரைமுருகன் எங்கிருக்கின்றார் என்று தெரியவில்லை: போலீசில் மனைவி புகார்!
எனது கணவர் சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்ததாக சாட்டை துரைமுருகன் நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எங்கு வைத்து விசாரணை செய்யப்படுகிறார்? அவர் மீது புகார் அளித்தது யார்? அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்கள் என்ன? என்று விவரம் தெரியாததால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் மனைவி இதுகுறித்து புகார் அளித்துள்ளார். எனது கணவரை கண்டுபிடித்து போலீசாரிடம் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் திருச்சி புலனாய்வு உதவி ஆணையரிடம் அவர் மனு அளித்துள்ளார். மேலும் போலீசார் என சொல்லி ஏழுபேர் துரைமுருகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் ஆகிவிட்டது என்றும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதனால் அவரை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எனது கணவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்ற பின்னர் இதுவரை அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார்? எங்கு இருக்கிறார்? என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் வழக்கறிஞர் இது குறித்து கூறிய போது ’சைபர் கிரைம் போலீசார் நேற்று சாட்டை துரைமுருகனை கைது செய்து அழைத்து செல்வதாக கூறினார்கள். ஆனால் அவர் இருக்கும் இடத்தை சரியாக கூறாமல் அலைக்கழித்து வருகின்றனர்.
இப்பொழுது வரை அவர் எங்கே அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்? எங்கு விசாரணை செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்? என்ற விவரம் தெரியவில்லை. இது ஒரு காவல்துறை செய்யும் வேலையா? பணத்திற்காக ரவுடிகள் கடத்தி செல்வது போல் காவல்துறையினர் சாட்டை துரைமுருகனை அழைத்து சென்றுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.