சினிமா செய்திகள்
எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான்: எஸ்.ஏ.சந்திரசேகர்
எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்றும், எந்த வீட்டில் தான் பிரச்சனை இல்லை என்றும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கேள்வி எழுப்பி உள்ளார்.
எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய 71வது திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். மேலும் பார்த்து வீரன் சரவணன், இனியா, சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியபோது ’எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான். எந்த வீட்டில் தான் அப்பாவுக்கும் மகனுக்கும் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. இன்று பிரச்சினை செய்தால் நாளை நாங்கள் ஒன்றாக ஒற்றுமையுடன் சேர்ந்து கொள்வோம், கட்டிப் பிடித்துக் கொள்வோம். எனவே என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் எங்களுடைய பிரச்சினை குறித்தும் பொதுவெளியில் தயவுசெய்து கேள்வி கேட்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும் இந்த படத்தில் நடித்த சாக்ஷி அகர்வால் மற்றும் இனியா ஆகிய இருவருமே மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். அவர்களே டப்பிங் பேசி பட புரமோஷனுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 80 களில் சட்டத்தை மையமாக வைத்து எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்கள் வெற்றி படங்கள் ஆகியுள்ளன. குறிப்பாக நீதிக்கு தண்டனை, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன், சாட்சி போன்ற படங்களை கூறலாம். அந்த வகையில் ’நான் கடவுள் இல்லை’ திரைப்படமும் ஒரு சட்ட கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.