தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய அரசாணையில் விதிமீறல்!

Published

on

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு. பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை முன்னர் சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். ஆனால் இந்த வழக்கை நேற்று சிபிஐக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில் விதிமீறல் உள்ளதாக தற்போது குற்றம்சாட்டப்படுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கும்பல் ஒன்று சமீபத்தில் கைது செய்யப்பட்டது. இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் அரசியல் பலமும், சாதிய பலமும் நிறைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து மாநில காவல் துறையிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கை மாற்றியது தமிழக அரசு. அதன்படி சிபிசிஐடி தனது விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி நேற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பாலியல் புகார் அளிக்கும் பெண் தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணையில் புகார் அளித்த பெண், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது, விதிமீறல் என சமூக ஆர்வலகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவரது சகோதரர் பெயரைக் குறிப்பிட்டார் இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் தமிழக அரசு அரசாணையில் அவர்களது பெயர் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version