கிரிக்கெட்
இந்திய அணியை வீழ்த்திய இலங்கைக்கு இத்தனை லட்சம் பரிசா?
சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 2-1 என்ற புள்ளி கணக்கில் இலங்கை அணி வீழ்த்தியது. இதனை அடுத்து அந்த அணிக்கு மிகப்பெரிய பரிசு தொகையை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியை இலங்கை அணி வென்றதை அடுத்து 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை வென்றுள்ளது.
இந்திய அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக தொடரை இழப்பது இதுதான் முதல் முறையாகும். இந்த நிலையில் இந்திய அணியை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடி வரும் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய பரிசு தொகையை அளித்து உள்ளது.
இதன்படி இலங்கை அணியினர்களுக்கு ரூபாய் 75 லட்சம் பரிசு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது என்றும், இலங்கை அணி வீரர்களின் திறமையை இலங்கை கிரிக்கெட் வாரியம் உணர்கிறது என்றும் அது மட்டுமன்றி பயிற்சியாளர்கள் வீரர்கள் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து தகுந்த நேரத்தில் இந்த வெற்றியை தேடிக் கொடுத்து உள்ளார்கள் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை அணிக்கு ரூபாய் 75 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுவதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தியதை இலங்கை கிரிக்கெட் அணி மட்டுமின்றி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.