தமிழ்நாடு
ரேஷன் கார்டு வைத்து இருந்தால் ரூ.1000.. இளைஞர் கைது!
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்து இருந்தால் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என யூடியூப் சேனலில் போலியாக செய்தி பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓசூர் அருகே அரசு திட்டங்கள் குறித்து போலியான தகவல்களை யூடியூப் மூலம் பரப்பி வந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேன்கனிக்கோட்டையை அடுத்த நாகிரெட்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி ஜனார்த்தன ரெட்டி. அண்மையில் இவர் புதிய அறிவிப்புகள் என்ற பெயரில் யூடியூப் செனல் ஒன்றைத் தொடங்கி 400-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அதில் பதிவிட்டுள்ளார்.
அரசு திட்டங்கள் குறித்த தகவல்களைப் பிரபல தொலைக்காட்சி சேனல்களின் லோகோ, புகைப்படங்களைப் பயன்படுத்தி போலியான தகவல்களை உண்மை என நம்புவது போல பதிவிட்டு வந்துள்ளார். மேலும் இந்த சேனலுக்கு டிக் மார்க்கும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் ரேஷன் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் தலா 1000 ரூபாய் அரசு வழங்கும் திட்டம் என இவர் போலியான ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இவர் மீது வந்த புகாரைத் தொடர்ந்து ஜனார்த்தன ரெட்டியை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.