தமிழ்நாடு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்.. உடனே இதைச் செய்யுங்கள்!
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 1.5 ஆண்டுகள் நிறைவேறி உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியில் கூறியப்படி விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தைத் தொடங்க உள்ளனர்.
குடும்பத் தலைவிகளுக்கு இந்த 1000 ரூபாய் ரொக்கப் பணமாக வழங்கப்பட மாட்டாது. நேரடியாக வங்கிக் கணக்கில் தான் செலுத்தப்படும்.
அண்மை தரவுகள் படி தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு உள்ள 14.9 லட்சம் குடும்பத் தலைவிகளிடம் வங்கிக் கணக்குகள் இல்லை என தெரியவந்துள்ளது.
எனவே கூட்டுறவு வங்கிகள் உதவியுடன் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கை இந்த பயனாளிகளுக்கு ஆரம்பித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்ட உடன் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசுப் பள்ளியில் படித்த பெண் குழந்தைகள், 12-ம் வகுப்பிற்குப் பிறகு மேல் படிப்பு படிக்க மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
மேலும் பெண்களுக்கு உள்ளூர் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் சேவை வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடங்க அதிக வாய்ப்புள்ளது.