இந்தியா
பிரியங்காவை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்: டுவிட்டரில் கணவர் ராபர்ட் வத்ரா வாழ்த்து!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரப்பிரதேச பொதுச் செயலாளராக கடந்த மாதம் நியமித்தார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பிரியங்கா காந்தி பதவியேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று உத்தரப் பிரதேசத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி. உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பிரியங்கா காந்தி மிஷன் உபி என்ற பிரச்சாரத்தை தொடங்கி மூன்று நாட்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் முகாமிட்டு அங்குள்ள முக்கிய தலைவர்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முதல் முறையாக பிரியங்கா காந்தி டுவிட்டர் கணைக்கை தொடங்கியுள்ளார். அவர் டுவிட்டர் கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்திய மக்களுக்குச் சேவை செய்ய, உத்தரப் பிரதேசம் நோக்கி பயணப்படும் உனக்கு என்னுடைய வாழ்த்துகள். தற்போது மிகவும் பழிவாங்கும் அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டியது பிரியங்காவின் கடமை, அவரை மக்களின் கைகளில் ஒப்படைத்துள்ளோம். பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ராபர்ட் வத்ரா குறிப்பிட்டுள்ளார்.