தமிழ்நாடு
சென்னையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்! மருத்துவர்கள் எச்சரிக்கை
இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் ஒரு சில நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்திய விமானப் படையின் உதவியால் மத்திய அரசு விரைவாக ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய நிலையில் சென்னையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட அதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா தோற்று அதிகரித்து வருவதால் வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜூன் மாதத்தில் பாதிப்பு ஒருவேளை உச்சத்தை எட்டினால் தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அதற்கு முன்பே தமிழக அரசு சுதாரித்து ஆக்சிஜனை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து தமிழக அரசு விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் சிலிண்டரை இருப்பு வைத்துக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.