கிரிக்கெட்

தோனியின் இடத்தில் இனி ரிஷப் பண்ட்: தோனிக்கு இடமில்லை!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாட அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த தொடரில் இந்திய அணியில் தோனி இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ஓய்வு பெறப்போவதாகவும், அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சும் அதிகமாக உலா வருகிறது.

தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சுக்கள் வந்தாலும், அவர் இதுகுறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அவரை பிசிசிஐ ஓரம்கட்ட உள்ளதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்திய அணி ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த அணியில் தோனிக்குப் பதிலாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அணி நிர்வாகத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

15 பேர் கொண்ட அணியில் தோனி இடம்பெற்றாலும் 11 பேர் கொண்ட ஆடும் அணியில் தோனி இடம்பெறமாட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாடுவார் எனவும் ரிஷப் பண்டுக்கு தேவையான ஆலோசனைகளை அவர் வழங்குவார் எனவும் தகவல்கள் வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version