இந்தியா
விவசாயிகள் பிரச்சனைக்கு குரல் கொடுத்த ரிஹானா, வினாயகரை அவமதித்தாரா?
டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதிய வேளாண்மை மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரிஹானாவின் டுவிட்டுக்கு பின்னரே சச்சின் டெண்டுல்கர் உள்பட பல கிரிக்கெட் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும் பதிலடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாடகி ரிஹானா தற்போது மேலாடை இன்றி அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ரிஹானாவின் அரை நிர்வாண புகைப்படம் என்பது சர்வ சாதாரணம் என்பதால் அது பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவர் கழுத்தில் வினாயகர் டாலரை அணிந்து அரைநிர்வாண போஸ் கொடுத்ததுதான் இந்துமத ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஏற்கனவே விவசாயிகளுக்கு ஆதரவாக ரிஹானா குரல் கொடுத்தபோது அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த பாஜகவினர் தற்போது மீண்டும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.