கிரிக்கெட்
“ஏன்டா இப்படி பயப்பட்றீங்க…”- ஆஸி., பேட்ஸ்மேன்களை வறுத்தெடுத்த Ponting
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் டெஸ்டில் வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்தியா, அதிலிருந்து மீண்டு வந்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவைப் பழி தீர்த்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ‘ஹிட் மேன்’ ரோகித் சர்மா களமிறங்க உள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஓப்பனரான டேவிட் வார்னர், காயத்திலிருந்து மீண்டு வந்து களமிறங்குகிறார்.
இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருப்பதால், அடுத்தப் போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் இரு அணிகளும் தலா ஒரு தொடரைக் கைப்பற்றியுள்ளன. இப்படியான சூழலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஒரு கறார் விமர்சனத்தைத் தங்கள் அணி வீரர்கள் மீது வைத்துள்ளார்.
பாண்டிங் இது குறித்து, ‘இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஜிங்கியா ரஹானேவும் சுப்மன் கில்லும் விளையாடியதைப் பாருங்கள். அந்த இன்னிங்ஸில் மிகக் குறைவான இலக்கைத்தான் இந்தியா அடைய வேண்டும் என்கிற நிலை இருந்தாலும், அவர்கள் ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு எதிராக மிக தைரியமாக புல் ஷாட்களை விளையாடினார்கள். அவர்கள் அந்த இன்னிங்ஸில் விளையாடியதை விட, இந்த மொத்த தொடரிலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக விளையாடிய புல் ஷாட்கள் குறைவாகத்தான் இருக்கும். இது ஆஸ்திரேலியாவுக்கு நல்லதல்ல’ என்று கூறியுள்ளார்.