தமிழ்நாடு
தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்பு: ஆளுங்கட்சி தான் காரணம் என குற்றச்சாட்டு!
கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் வருவது போல தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆளும் அதிமுக மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கணைக்கு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி.
அப்போது, அதிமுக அரசு மேலும் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவது ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே இது தவிர்க்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை போதுமான அளவிற்கு திறக்கவில்லை . பொதுவாக 25 டன் நெல் கொள்முதல் செய்வது வழக்கம் ஆனால் தற்போது 15 லட்சம் டன் நெல் கொள்முதல் மட்டுமே செய்து இருக்கிறது.
இதனால் கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் எப்படி வருமோ அதே போல அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆளுங்கட்சி தான் காரணம் என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.