தமிழ்நாடு
ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ள வசதியாக ஏடிஎம்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவசர தேவைக்கு பணம் எடுக்க ஏடிஎம் செல்லும் போது சில சமயம் ஏடிஎம்களில் பணம் இல்லாத காரணத்தினாலும், தொழில்நுட்ப கோளாறு காரணத்தினாலும் பணம் எடுக்க முடியாத நிலை வாடிக்கையாளருக்கு ஏற்படுகிறது.
இதனால் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு முடிவு கொண்டுவர ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த விதி அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருப்பதாகவும் ஒரு மாதத்தில் ஏடிஎம் இயந்திரம் மொத்தமாக பத்து மணி நேரம் பணம் இல்லாமல் இருந்தால் ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்ட வங்கி அபராதம் விதிக்கும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போவதால் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அனைத்து வங்கிகளும் தாங்கள் பராமரித்து வரும் ஏடிஎம்களில் சரியான நேரத்தில் பணத்தை நிரப்ப வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து இனி அனைத்து ஏடிஎம்களும் முறையாக பராமரிக்கப்பட்டு பணம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.