தமிழ்நாடு
கொரோனா நெருக்கடி: 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு – தமிழக அரசு
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய முழு முடக்க உத்தரவை தமிழக அரசு அமல் செய்ய உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் கிடைப்பதும், ரெம்டெசிவிர் போன்ற அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பது மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இதை சமாளிக்கத் தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ‘மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி தட்டுப்பாடு குறையும்.
அரசு காப்பீடு மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்கள் இனி பயன் பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.