தமிழ்நாடு
ரெம்டிசிவியர் மருந்துக்கு இனி சென்னை செல்ல வேண்டாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
ரெம்டிசிவியர் மருந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
எனவே தமிழகம் முழுவதில் இருந்தும் நோயாளிகளின் உறவினர்கள் சென்னையில் வந்து சாலையில் காத்துக்கிடந்து மருந்துகளைப் பெற்றுச்சென்று வந்தனர்.
இந்நிலையில், 5 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரெம்டிசிவியர் மருந்து விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளனர். தினமும் மாலை 4 மணி வரை இந்த 5 மாவட்ட மருத்துவமனைகளில் ரெம்டிசிவியர் கிடைக்கும்.
மதுரை, திருச்சி, சேலம், கோவை மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரெம்டிசிவியர் மருந்து கிடைக்கும்.
இத்தனை நாட்களாகச் சென்னையில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. எனவே கூட்ட நெரிசலும் அதிகமாக இருந்து வந்தது. அத்தியாவசிய வசதிகள் இல்லாததாலும் நோயாளிகளின் உறவினர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இன்று முதல் 5 மாவட்டங்களிலும் ரெம்டிசிவியர் மருந்து கிடைக்கும் என்ற அறிவிப்பு முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் வெளியாகியுள்ளது.
எனவே இன்று வரவேற்பு குறைவாக இருந்தாலும், நாளை முதல் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் பெரும் அளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் திங்கட்கிழமை முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதால், மருந்து வாங்கச் செல்பவர்கள் சொந்த வாகனங்களில் வெளியூர் சென்று ரெம்டிசிவியர் மருந்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் ரெம்டிசிவியர் மருந்து குறைந்தவிலைக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.