இந்தியா
உச்சத்தில் கொரோனா 2வது அலை; மருந்து ஏற்றுமதிக்குத் தடை விதித்த அரசு அதிரடி!!!
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 1.50 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வைரஸ் தொற்றுக்கு எதிராக கொடுக்கப்படும் ரெம்டெஸிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசுத் தடை விதித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரும் வரை ரெம்டெஸிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக சுற்றறிக்கை மூலம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஏப்ரல் 11 ஆம் தேதியன்று வரை, நாட்டில் 11.08 லட்சம் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் இருக்கின்றன. எனவே, இதன் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெஸிவிர் மருந்து அதிக அளவு தேவைப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த மருந்தின் தேவை மேலும் அதிகரிக்கலாம். எனவே, நாட்டில் கொரோனா தொற்று ஒரு கட்டுக்குள் வரும் வரை ரெம்டெஸிவிர் மருந்தை எந்த நிறுவனமும் ஏற்றுமதி செய்யக் கூடாது’ என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசு.
நாட்டில் மொத்தம் 7 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ரெம்டெஸிவிர் மருந்தை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மொத்தமும் இணைந்து ஒரு மாதத்திற்கு சுமார் 38.80 ரெம்டெஸிவிர் மருந்து யூனிட்டுகளை உற்பத்தி செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது மட்டுமல்லாமல், தங்களிடம் எந்த அளவுக்கு இருப்பு இருக்கிறது என்பதையும் இணையதளத்தில் பதிவேற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.